Thursday, 28 December 2017

இது முண்டாசுக்குள் கவிவளத்தவனுக்கு



இயற்கையும் கடலும் எம்மவர்களுடன் குழுமி
பிணைந்ததில் யம்மவர்களில் சிலர் நைந்து
பிய்ந்து காய்ந்து காணாமல் போனார்கள்
நானும் மாலைப்பொழுதில் வானையும்
கடலையும் நோக்கி நின்றேன்
இம் மேடை மிசையே
உன் முன் சிரித்தவை
என்முன் நமட்டி நகைக்கிறது
மௌனம் தின்று தின்று
திகட்டும் தருணத்தில்
முண்டாசு கேடயம் மீசை ஈட்டி தா
நானும் மீட்ட வேண்டும்.


Wednesday, 6 December 2017

பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள் க. வினோதா

நூல் மதிப்புரை – சிற்றேடு (அக்டோபர் - டிசம்பர். 2017)
பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்
க. வினோதா
20 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய சிந்தனை மரபுகளுள் அமைப்பியல் ஒன்றாகும். இதனை முன்னெடுத்தவர்களுள் தமிழவன் முக்கியமானவர். அமைப்பியல், குறியியல் ஆய்வுகளைத் தமிழியல் திறனாய்வு முறைகளோடு இணைத்துக் காட்டியவர். அமைப்பியல் சிந்தனை  பழந்தமிழ் நூல்களில் இடம்பெறுவதை விளக்கும் விதமாக   “பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்” எனும் நூலினைத் தமிழவன் எழுதியுள்ளார். குறி, குறிப்பீடு, குறிப்பான் இவைகளைப்பற்றி  மேலைநாட்டு அறிஞர்களின் சிந்தனை தமிழர்களின் சிந்தனையோடு ஒத்துபோகும் பண்பினை இருமைக்குள் நின்று விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் மொழியியலும் இலக்கியமும், சொல்லாடல், நச்சினார்க்கினியர் குறியியல் , குறியியல் எனும் நான்கு கட்டுரைகள் உள்ளன.
மொழியியலும், இலக்கியமும் எனும்  கட்டுரையில் மொழியியல் எவ்வாறு பிற துறைகளோடு இணைகிறது என்று விளக்கியுள்ளார்.  ரோமன் யாக்கப்சனின் மொழி  கடந்த நிலையைத் தொல்காப்பியத்தின் குறிப்பில் தோன்றலோடு ஒப்பிடுகிறார்.   இவ்வாறன கருத்தியலை நன்னூல் கூறும் எட்டு வகைக் குறிப்பில் தோன்றலோடு விளக்குகிறார். இக்கருத்தினைத்  “தலைவர் மகிழ்ச்சியில்  இருந்தார்”,  “தலைவர் மகிழ்ச்சியில் மிதந்தார்” எனும் இரு உதாரணங்களின் வழி விளக்குகிறார்.  ‘இருந்தார்’,  ‘மிதந்தார்’ என்ற இரண்டிற்கும் உள்ள சேர்க்கை உறவுகள் ஆகுபெயர், தொடர்பால் உருவாயினும் தமிழ் மொழியில் இது வேறுபட்டு இயங்குவதைக் குறிப்பிட்டுள்ளார். ஆகுபெயர் முதலிய குறிப்பில் தோன்றல்கள் மொழியின் இடைவெளிகளால் கட்டமைக்கப்படுகின்றன என்று கூறி இவை மொழிகடந்த நிலையில்லை என விளக்குகிறார்.  இதைப்போலவே இலக்கியத்தில் வரக்கூடிய உள்ளுறை , உருவகம் என்பவையும் மொழியினுடைய நீட்சியாலே உருவாகின்றன என்கிறார். மொழியின் இடைவெளி தான் மொழிக்கு நீட்சியைத் தருகிறது. அதாவது மொழி செயல்படும் வெவ்வேறு இடைவெளி, நீட்சி நிலைகளாக இவற்றைக் கருதவேண்டும். மொழி செயல்படும் தளங்களுக்குள் இவைகளைக் காணவேண்டும் என இக்கட்டுரை வலியுறுத்துகிறது.  அனைத்தும் மொழிச் செயல்பாடே என்று வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மொழி கடந்த நிலையும் கூட மொழி செயல்படும் வெவ்வேறு தளங்களைச் சார்ந்தவை என்று கூறுவதாகக் கட்டுரை உள்ளது.
சொல்லாடல் எனும் கட்டுரையில் சொன்மையும், பொருண்மையும் குறிப்பான், குறிப்பீடோடு தொடர்புபடும் விதத்தினைக் கூறியுள்ளார். இதனுடன் தொடர்புடைய சமஸ்கிருதக் கருத்தான பத்ருகிரியின் ‘வாக்கிய பாதிய’  என்னும் ஸ்போட்டத்தைக் குறிப்பிடுகிறார். ஸ்போட்டம் பற்றி குறிப்பிடும் பொழுது கீழ்க்காணும் கருத்துகள் குறிப்பிடத்தக்கவை.
“ஸ்போட்டம் இருப்பதால் தான் பொருள் மனத்தில் புலப்படுகிறது. அதாவது அறிவு மொழிரூபத்தில் இருக்கிறதென்று இதிலிருந்து பெறப்படுகிறது என்று”கபில்கபூர் கூறுவதைச் சொல்கிறார். இது இதயம், (pre-intellectual language), மத்தியனம் (language located in buddi), வைகாரி (the sequential, ordered arrangement of discrete units of language) இவைகளை அடிப்படையாக கொண்டது.
இக்கருத்துப் பின்னணியில் பொருள் வேறு, பொருண்மை வேறு என்பதில் ஸ்போட்டத்தின் தன்மை இருக்கிறது என்கிறார். பொருண்மை, சொன்மை கருத்துகள் வடமொழித் தொடர்பினால் வந்திருக்கலாம் என்கிறார்.
ஸ்போட்டம் மொழியுடனும் மொழியிலிருந்து வேறுபட்டும் நிற்கிறது. ஸ்போட்டம் , சொல்லாடல் , பொருண்மை மூன்றும் ஒரே தளத்தில் பயணிக்க  கூடியவை.   ஸ்போட்டத்தில் மொழிக்கிடங்கும் பேச்சும் கலந்துள்ளன. இது சொல், சொன்மை என்ற சசூரின்  இடுகுறித்தன்மையோடு ஒத்துப்போகும். மொழிக்கிடங்கு என்பது மொழியின் சமூகப் பரிமாணம் என்கிறார் சசூர். இதன் வழியாக ஸ்போட்டத்தில் மொழிக்கிடங்கும் பேச்சும் கலந்துள்ளன எனலாம்.  
மிஷெல் பூக்கோ- ‘பொருள்களின் ஒழுங்கு’, சொல்லாடல்கள், குறிகளால் உருவானவை எனினும் குறிகளால் விஷயங்களைக் குறிப்பதைவிட அதிக பணி சொல்லாடல்களுக்கு உண்டு. இந்த ‘அதிகம்’ என்பதுதான் சொல்லாடல்களை மொழியாகவோ பேச்சாகவோ குறுக்குவது இல்லை. இந்த அதிகம் என்பதைத்தான் வெளிக்கொண்டு வரவும் விளக்கவும் செய்ய வேண்டும். சொல்லாடல் என்பது உற்பத்தி உறவுடன் நேரடித் தொடர்புடைய  கருத்துருவங்களில் இருந்து மாறுபட்டது. அதாவது அறிவின் புதைபொருளியல் சொல்லாடல்  என்கிறார்”.
பென்வினிஸ்த்தின்,  “ஒலிகள், பொருள்களன்கள், வார்த்தைகள் ஆகியவற்றிற்கு மொழியளவில் செயல்பாடுண்டு” என்பதும்; டயனெ மாக்டொனாலாவின் “சொல்லாடல்களின் கோட்பாடுகள் சொல்லாடல்களுக்கு உரையாடல் குணம் இருக்க வேண்டும்” என்பதும்; சொல்லாடல்கள் பற்றிய வரையறைகளைத் தருகின்றன.
சொல்லாடலுடன் ஸ்போட்டம், பொருண்மை, குறிப்பான் இவைகளின் இணைவினைக்  குறித்துள்ளார். சொன்மை, பொருண்மை, ஸ்போட்டம், லாங்(மொழிக்கிடங்கு- laung ), பரோல்(பேச்சு- parole) இவைகள் சொல்லாடலோடு தொடர்புடையவை என்று விளக்குகிறார். சொல்லாடல் அமைப்பு ஒழுங்கிற்கு உட்பட்டும் உட்படாமலும் இருந்து முன்னவைகளிலிருந்து வேறுபட்டும் இருக்கிறது என்பதை ஃபூக்கோ வழி நிறுவுகிறார். தொல்காப்பியத்தின் பொருண்மை தொடர்பான செய்தி வடமொழித் தன்மையுடையது என்பது ஆராய்ச்சிக்குரியது. சொல்லாடல் மொழியின் முன் செயல்பாடுகளுடன் வழி தோற்றத்துடன் தொடர்புடையதை  மேற்கத்திய கோட்பாட்டாளர்களின் விளக்கங்களுடன் கூறியுள்ளார். வாசகன் கையில் சொல்லாடலைத் தந்ததும் தொல்காப்பிய செய்யுளியல் மீளாய்வு  அவசியத்தினைக் கூறியதும் வரவேற்கத்தக்கது.
நச்சினார்க்கினியரின் குறியியல் எனும் கட்டுரையில்  நச்சினார்க்கினியார் இடுகுறிச்சார்ந்தே சிந்தித்துள்ளார் என்கிறார். இவரது குறியியல் மாதிரியானது மொழியை மாதிரியாக எடுத்துக்கொண்டு அதன் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு பொருள் கொள்ளும் முறையாகும். தனது கருத்திற்குப் பொருத்தமாக அமைக்கும் முறை. உண்மையாக மாற்றும் திறமையும் மூல நூலுக்கு எதிராக அமையாமல் நுட்பமாக மாற்றும் அரசியலையும் கொண்டுள்ளது. தொல்காப்பியப் பனுவலை மாதிரியாக எடுத்துக்கொண்டு அதன் மீதான தன்னுடைய ஒரு விளக்கத்தின் மூலம் சமஸ்கிருதத்துடனான கலாச்சார இணைப்பைக் கொண்டதற்குக் குறியியல் சார்ந்த சிந்தனைதான் காரணம்  என்கிறார்.  ஆகுபெயர், அன்மொழித்தொகை போன்றவற்றை மொழி குறியீட்டுத் தளத்தில் தொடர்பு படும் விதமாக நச்சினார்க்கினியர் முன்வைக்கிறார் என விளக்குகிறார். அகம், புறம் இணைவை அவர் கூறுவதற்கும் குறியீடுச் சார்ந்த சிந்தனையே காரணம் என்கிறார்.
 குறியியல் எனும் கட்டுரையில் மொழி என்பது குறியாகவும் ஆகுபெயர், அன்மொழி, உருவகம், இவை போன்று வெவ்வேறு நிலையிலும் செயல்படவல்லது. மொழியின் வெவ்வேறு சாத்தியப்பாடுகளை லெக்கான், தெரிதா, ஃபூக்கோ வழி மொழிக்கும் அது உணர்த்தும் பொருளுக்கும் உள்ள குறியீட்டு உறவுகளைக் குறிப்பிடுகிறார்.  மொழி ஒழுங்கு நிலை பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒழுங்கின்மைகளும் சாத்தியம் என்பதன் தொடர்ச்சியாகத் தொல்காப்பித்தின் புறநடைகள் உணர்த்துவதையும் குறிப்பிடுகிறார். மொழிக்கும், பொருளுக்குமான உறவுகள் குறியீட்டு நிலையில் இருப்பதால் பல்வேறு பொருள் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன என்பதைப் பூக்கோ, தெரிதாவின் வழி விளக்கித் தொல்காப்பியத்தில் உள்ள தெரிநிலை – குறிப்பு, ஆகுபெயர், உள்ளுறை  முதலிய கருத்தியல்களோடும் ஒப்புமைப்படுத்தி விளக்குகிறார்.   முன்னம், நோக்கு, மாட்டு வழியாக வெவ்வேறு சாத்தியப்பாடுகளை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் மொழி இருந்து கொண்டே இருக்கிறது.
          தொல்காப்பியம், உரையாசிரியர்கள் (சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர்) குறிப்பிடும்  தமிழ்ச் சிந்தனை மரபில் செயல்படும் மொழியின் பல்வேறு குறியீட்டு நிலைப் பொருள்சாத்தியங்களை சசூர், பூக்கோ, ரோலன் பார்த்,  தெரிதா , லெக்கான், விட்டிஹென்ஸ்டீன் போன்றவர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். இங்குக் குறியியல் சார்ந்த சிந்தனை வளராமல் போனத்தற்குச் சொன்மை, பொருண்மை ஆய்வுகள் வளராமையே காரணம் என்கிறார்.
 தமிழின் குறியியல் சிந்தனையை நான், நீ எனும் இரு சொற்களின் வாயிலாக விளக்கியுள்ளார். அதாவது இவ்விரு சொற்களும் செய்யுளியல் கூறும் முன்னத்தால் பெறக்கூடியதான சொல்பவர், கேட்பவர் இரண்டும் ஆசிரியர், வாசகனுடன் தொடர்புற்று இருப்பதை விளக்கியுள்ளார்.
பொருளுக்குப் பொருள் காணுதல் தமிழ் மரபிலும் உண்டு என்பதற்கு உரை கூறும் வகைகளை விளக்குகிறார். அதாவது நிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று ஆகியன.  இவ்வுரை வகைகள் அனைத்தும் எப்போதும் இன்னொன்றைக் குறித்து நிற்கும் உரை வகைகளாகும். எனவே குறித்தன்மையை இந்த  உரை வகைகள் பெற்றிருக்கின்றன. குறியியலின் பின்னணியைத் தமிழ் மரபின் சிந்தனையோடு அணுகினால் புதுவிதமான பொருள்தளத்திற்குச் செல்லமுடியும் என்பதை வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
          இந்நூல் பழந்தமிழ் நூல்களின் உரைகளைக் குறியியல் சிந்தனையோடு அணுகுவதற்கான வழிமுறையைத் தொகுத்துத் தருகிறது. இதற்கான மூலங்கள் தமிழ்ச்சிந்தனையிலும் இருப்பதைக் கூறுகிறது. பழந்தமிழ் உரைகளைக் குறியியல் அறிவோடு அணுகுவதன் வாயிலாக உரையின் பின்னணிகளை, சார்புநிலைப் போக்கை அடையாளம் காண முடியும். இக்கருத்தினை வழியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது எனலாம்.
          அமைப்பியல்- பின் அமைப்பியல் ஆய்வுமுறைகளையும் தொல்காப்பியம், அதன் மீதான உரையாசிரியரின் ஆய்வுகளையும் இணைத்துத் தமிழியல் ஆய்வை மரபும் புதுமையும் இணைந்த ஒன்றாக இந்நூல் பார்த்திருக்கிறது. சங்க இலக்கியம், புதுக்கவிதை, மேலைக்கவிதைச் சான்றுகளுடனும் இந்த ஆய்வு அமைந்துள்ளது. இவ்வாறான ஆய்வுகள் தமிழின் குறியியல் சிந்தனையை நவீனப்படுத்தும். பழந்தமிழ் ஆய்வுகளுக்கும் இலக்கியம் / கவிதையியல் ஆய்வுகளுக்கும் ஒரு மாதிரி ஆய்வாக இதைக் குறிப்பிட முடியும்.     

 நூல்       :       பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்
ஆசிரியர் :       தமிழவன்
பதிப்பகம்:      உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
     பதிப்பு:      மு.ப. 2009

  

சமகாலப் பார்வையில் பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள் -க. வினோதா



         
நூல் மதிப்புரை – புதுபுனல். ஜனவரி  2017

சமகாலப் பார்வையில் பழந்தமிழ் இலக்கிய  ஆய்வுகள்
(ந. முருகேச பாண்டியனின் மறுவாசிப்பில் மரபிலக்கியம்  சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை என்ற நூலின் மதிப்புரை)
                                                        க. வினோதா
          மறுவாசிப்பில் மரபிலக்கியங்கள் சங்க இலக்கியம் முதல் பாரதிசாசன் வரை என்ற நூல் மரபிலக்கியங்களைப் புதிய சிந்தனைமரபுகளின் தொடர்ச்சியாக எவ்வாறு அணுகுவது என்பதைக் கூறுவதாக உள்ளது. இருபதாம்  நூற்றாண்டின் கருத்துப் பின்னணியில் ந.முருகேச பாண்டியன் இந்நூலை எழுதியுள்ளார். மரபிலக்கியங்களின் மரபான அழகியல் வாசிப்பிலிருந்து சமுக அமைப்பின் ஆணிவேரன பெண்கள், அரவாணிகள்,  ஒடுக்கப்படுத்தப்பட்டோர் இவர்களை மையம்மிட்டு சமுகம் சார்ந்த மதிப்பிடுகளை அதாவது பாலியல் சார்ந்தவைகள், சமூக அங்கிகாரங்கள் போன்றவைகள்  மரபிலக்கியங்களில் எவ்வாறு பதிவாகியுள்ளன. என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.
இந்நூலில், சங்க இலக்கியத்தில் பாலியல் ஆண் – பெண் உறவு நிலை, சங்க பெண் கவிஞர்கள் சித்தரிக்கும் சமூகப் பதிவுகள், திருக்குறள் உலகப் பொதுமறையா? சில சொல்லாடல்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் பற்றிய பதிவுகள்,  பழந்தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள் பதிணென் கீழ்க்கணக்கு அறநூல்களும் பெண்பற்றிய மதிப்பீடுகளும், தமிழகத்தில் ஜைன சமயம், மறுவாசிப்பில் மணிமேகலை,  பாரதிதாசன் என்ற இலக்கிய ஆளுமையின் உருவாக்கம் எனும் ஒன்பது தலைப்புகள் உள்ளன. இந்நூலின் ஆசிரியர், மதுரை மாவட்டம் சமயநல்லூரில் 1957 ல் பிறந்தார். தேடல் என்ற இதழின் மூலம் 1970 களில் கவிஞராக அறிமுகம் ஆனார். விமர்சனத் துறையில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுதிக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டதில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். முக்கியமான நூல்கள் உலக இலக்கியம் (2004), என் இலக்கிய நண்பர்கள் (2007), அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் (2008)
மரபிலக்கியங்களை மறுவாசிப்பு செய்வதன் வாயிலாக இறுகிய கட்டமைப்பு வைத்துக்கொண்டு சொந்தம்  கொண்டாடுபவர்களிடமிருந்தும் , தட்டையான மொழியமைபிலிருந்தும் தாண்டி இன்றைய மொழியில் பயணிக்கவேண்டியது அவசியமாகும். இதற்குத் தமிழ் மரபின் எச்சங்கள் பதிவாகியுள்ள  மரபிலக்கியங்கள் இன்றைய சூழலில்  வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசிக்க நேரும் பொழுது மரபு நவீனம் இரண்டிற்குமான நேசத்தினைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். புதியதில் பழையதின் சாயல் இருக்க வேண்டிய அவசியங்களை என்னுரையில் நினைவு கொண்டுள்ளார்.
   சங்க இலக்கியத்தில் பாலியல் ஆண் – பெண் உறவு நிலை எனும் தலைப்பில் மொழி இல்லாவிடில் மனிதன் இருப்பான் மனித சமூகம் இருக்காது சமூகப் புரிதலுக்குப் மொழிவழியான இலக்கியங்கள் மிகவும் அவசியமாகும். வரலாற்றை மனிதன் மூலம் நிகழ்த்துதலில் தமிழ் நிலம்,  சங்க இலக்கியம் சார்ந்த கருத்து நிலை புரிதல் தற்காலத்தில் அவசியமாகும். தொல்சமய நம்பிக்கைகள் சிதைப்பினால் உண்டான இயல்பூக்கமான காதல் வீரம் போன்றைவைகள் இலக்கிய பொருளாகத் தோற்றம் பெற்றன. எல்லை வரையறுப்பதில் உள்ள அரசியல் நோக்கம், இனக்குழு, குடி இரண்டிற்குமான இணைவில் தமிழின் பங்களிப்பு, இனக்குழு இணைப்பிற்குப் பாணர்,  புலவர்களின் பங்களிப்பு, இலக்கிய கட்டமைப்பில் தந்தை வழி சமூகத்தின் நிகழ்ந்த அகம் புற கட்டமைப்பில் தாய் வழி சமூகத்தின் எச்சங்கள் பதிவு, பெண்ணைப் புனைவியல் ரீதியில் உருவாக்கும் பொழுது பெண்ணைப் பிரதிக்குள் பிம்பமாக்குதல், போன்றவகள் சங்க இலக்கியங்களின் மேட்டுக்குடி போக்கினால் விளைந்தாகும். எனினும் பெண்கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் காமம் பெண்மனத்தினைத் துல்லியமாக பதிவு செய்திடும் போக்கு குறு.28,29(ஔவை),252, 27(வெ.வீ),9(க.பே.ந) இவர்களிடம் காணப்படுவதைக் காணமுடிகிறது என்கிறார். இக்கட்டுரையின் வாயிலாக சங்க இலகியத்தில் ஆண்,பெண் உறவு நிலை பாலியல் சார்ந்து மட்டுமே இயங்கும் விதத்தினைக் கூறியுள்ளார்.  ஆணுக்கும் ,பெண்னுக்கும் இடையில் சங்க இலக்கியம், தமிழ், காதல், வீரம், பாலியல் இவைகளின் ஊடாக குடும்ம அமைப்பு, சமுதாயம் இவைகளில் பெண்தனிக்கூறுத் தனியாக வெளிப்படினும் ஆண்மையத்தை உள்ளடக்கியுள்ளது என்பதை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் எனலாம்.
 சங்க பெண் கவிஞர்கள் சித்தரிக்கும் சமூகப் பதிவுகள் என்ற கட்டுரையில்  அழகியலோடு இணைந்த ஆய்வின் அவசியதினை முன்னிறுத்தும் வகையில் இனக்குழு வாழ்க்கை, ஆண்வழி அதிகாரம் போன்றவற்றைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். கவிஞர்கள் பற்றி குறிப்பிடும் பொழுது 473 கவிஞர்கள் இதில் 41 பெண்கவிஞர்கள் தான் உள்ளனர். தொகுப்பில் அரசியல் இருந்திருக்கலாம் என்கிறார். கவிதைகளில் பெண் புலங்குவெளி சுருக்கம், குடும்பம், கணவன், குழந்தை, இயல்பான பாலுணர்வுக் கட்டுப்படுத்துதலென இருப்பதை ஆண் பொதுபுத்தியில் கவிதை எழுதியிருக்கலாம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பெரும்பாண்மை மாற்றத்துடனே உள்ளது.  காதல் மரபைப் பெண்கவிஞர்கள் மீறியுள்ளனர். உடலுறுப்பு வருணை ஆண் மரபை சிதைக்கும் விதமாக உள்ளது.  ஆண் பார்வை உடலுறவு என்ற ஒற்றை பார்வை ஆனால் ஆணின் வருகையை எதிர்பார்த்தல், மார்பில் சாய்தல், ஆண்விருப்பத்தை எண்ணி மகிழ்தல் என விரிகிறது என்று தனித்துவம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
கற்பு கருத்தாக்க பின்னணியில் ஆணின் பொதுபுத்தியில் விளைந்த பயிராகக் கருதும் கருத்து பெண் என்பதையும் காதல், கற்பு, நிலம், பாலியல் உணர்வு போன்றவைகள்  இட்ட உரமாகவும் பாவிக்கும் எண்ணத்திற்கு கொண்டுச் செல்வதாக இக்கட்டுரை உள்ளது.
திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் எனும் கட்டுரையில் திருக்குறள் தொடர்ந்துச் செல்வாக்குகோடுத் தொடர்ந்து வந்துள்ளது. எனினும் பக்தி இயக்க காலத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போனதற்கும்,  தேவாரம் / திருக்குறள் இருபதாம் நூற்றாண்டு அரசியலில் முக்கிய விவாத பொருளாக இருந்ததற்கும், திருக்குறளுக்குத் தமிழ் அடையாளம் தர முயலுவதற்கும் நவீன மனிதனுக்கும் / திருக்குறள் புதிய சொல்லாடல் மூலம் விடை காண மறுவாசிப்பு அவசியம் என்கிறார்.
உலக பொதுமறை என்ற கருத்திற்குப் பொருந்தாதவைகாளாக ஜைனத்  சிந்தனை சமமற்ற சூழலை வினைக்கோட்பாடு முன்வைத்தது. பஞ்சசீலம் கொள்கை அனைவருக்கும் பொருந்தாத சூழல் (கொல்லாமை, களவு செய்யாமை , காமம் கொள்ளாமை, பொய் பேசாமை , கள் குடிக்காமை) மதங்கள் கட்டமைத்த ஒழுக்கம் – அறம் சொல்லாடல்களை அதாவது சரி /சரியல்ல, ஒழுக்கம் / ஒழுக்கமின்மை, அறம் /அறமின்மை இவைகள் காலத்துடன் இணையும் போக்கில் முரண்பாடு போன்றவைகள் “திருக்குறளில் கூறும் அறக்கருத்துக்கள் எல்லா காலத்திற்கும் பொதுவானது இல்லை என்பது யதார்த்தம் இது குறையில்லை” என்கிறார்.
புலால் மறுத்தல், பெண்சொல்  கேளல், கற்றவர் கல்லாத்தவர் முரண், அதிகார மேலாதிக்கம், பத்துக் குறள் கட்டமைப்பு போன்றவற்றை விமர்சனத்தோடு அணுக வேண்டியதன் அவசியத்தைக் கூறியுள்ளார். இக்கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு உலகப் பொதுமறை என்ற சொல்லாடல் இடையூறாக இருப்பதைக் கூறியுள்ளார்.
உலக பொதுவிலக்கியம் திருக்குறள் என்று கூறுவதால் வரும் இடர்பாடுகளைக் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஏற்புடையதுஎனினும் பொதுவான இலக்கியம் எவ்வாறு இருக்கும் என்பதில் மனம் செல்லுகிறது.
பழந்தமிழ் இலகியத்தில் ஒடுக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் எனும் கட்டுரையில் பல்வேறு மொழி பேசும் அந்தணர்கள் தமிழகத்திற்கு வந்தனர் இதன் பின்புலத்தில் குடிகளாக வாழ்ந்தவர்களின் குரல்கள் புறக்கணித்ததோடு அல்லாமல் தொடர்ந்து வரலாற்றில் இழிவு, தீட்டு கருத்து நிலைத்தது இதற்கு இலக்கியம் ஊடகமானதை நினைவுக் கூறுகிறார்.  எனினும் வரலாற்று தொடர்ச்சியில் எதிர்ப்பு  வேறுவிதமாக அதிகார வர்க்கத்தின் ஓங்கு குரல்களுக்கிடையில் இருப்பதைப் புரிய வேண்டியதற்கான அவசியத்தினை நினைவூட்டும் விதமாக இக்கட்டுரையில் கூறியுள்ளார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள் எனும் கட்டுரையில் பேடி பற்றிய தகவல்களை இலக்கியங்களில் இருந்து தொகுத்துத் தந்துள்ளார். ஆண்,பெண் என்ற கருத்து நிலை புனைவிற்குள் பேடி, அலி என்ற கருத்து உருவாக்கத்தினைத் தொல்காப்பியரின் உயர்திணை, அல்திணை கருத்து வழி இவர்களுக்கான இலக்கணம்  வரைவினைக் கூறியுள்ளார்.
பதிணென் கீழ்கணக்கு அறநூல்களும், பெண் பற்றிய மதிப்பீடுகளும் எனும் கட்டுரையில் பதினொரு அறநூல்களில் பெண்களின் இருப்பு போக்குகினை இக்கட்டுரையில் கூறியுள்ளார். பெண்களுக்குக் கூறப்பட்ட  இழிவு நிலை இலக்கணங்கள் அனைத்தும் ஆண் மைய கல்வி முறையினால் விளைந்தவை என்கிறார். பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று என்னும் ஆணின் மனச்சிந்தனை வளர்ச்சியின் கற்பித்தல் கூடமாக  அறநூல்கள் உள்ளன என்ற கருத்து புதிய ஆய்வுத் தளத்தினை நினைவூட்டும் வகையில் உள்ளது. உடலுறவில் பால் ஒழுங்குமுறை கட்டமைப்பு, குடும்ப வாழ்வே சமூக அறமாகக் கட்டமைக்கும் பாங்கு,  நாணம் என்ற கருத்தியலின் பரிசோதனைப்  போன்றவைகள் சங்க காலத்திற்குப் பிந்தைய பெண் பற்றிய கருத்தியலைப் புரிந்து கொள்வதற்கு மீட்டுருவாக்கத்தில் அறநூல்கள் முக்கிய பங்கு வகிப்பதைக் கூறியுள்ளார். கல்வி முறை எவ்வாறு ஆண்மையத்தைக் கட்டமைக்கிறது என்கிறது இக்கட்டுரை
தமிழகத்தில் ஜைன சமயம் எனும் கட்டுரையில் ஜைன சமய நுழைவின் காரணமாக வைதீகத்தின் எழுச்சியினை இலக்கிய எதிர் இலக்கிய படைப்பின் வழி  ஆராய்கிறது இக்கட்டுரை. அதாவது “திரி ஸஷ்டி ஸ்லாக புருஷர் ஸரித்திரம் என்ற நூல் 63 ஜைனர்கள் தீர்த்தங்காரர் இருபத்து நால்வர், மன்னர்கள்  பன்னிருவர், பாலதேவர், ஒன்பதின்மர், பிரதிவாசுதேவன் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவரின் வரலாற்றைக் குறிப்பிடுவது ஸ்ரீபுராணம். இதனைக்  கருத்தியல் ரீதியாக வீழ்த்த எழுதப்பெற்ற நூல்தான் பெரிய புராணம் என்கிறார். சமயம்  என்ற  கதை உருவாக்கதிற்கு இலக்கியங்கள் உதவியதைக் கூறியுள்ளார்.
 பாரதிதாசன் என்ற இலக்கிய ஆளுமையின் உருவாக்கம் எனும் கட்டுரையில்
பாரதிதாசனின் சம காலத்தில் நிலவிய சமூக, அரசியல் முதலியவைகளை விளக்கும் முறையில் தரும் பொழுது பல தகவல்கள் தெரிய வருகின்றன அவை இருபதாம் நூற்றாண்டு தமிழர் பிரச்சினை சாதி ஏற்றத்தாழ்வு , வள்ளார், உழவர், குயவர், நாவிதர், போன்றோரைக் கேவலமாகக் கருதும் நிலை, பாரதியார், வள்ளார்- புதிய சிந்தனைத் தொடக்கப் பின்னணியில் தமிழரின வாதத்தை முதன்மைப்படுத்தியவர் பாரதிதாசன் ஆவார்.
பாரதிதாசன் இலக்கிய ஆளுமையை மூன்று காலகட்டதின் பின்புலத்தில் விளக்கியுள்ளார். முதல் காலக்கட்டம் வடவர் எதிர்ப்பு , மூட நம்பிக்கை எதிர்ப்பு ,கடவுள் மறுப்பு, சாதிகள் ஒழிப்பு, விதவை மறுமணம், பார்பனிய எதிர்ப்பு, வருணாசிரம ஒழிப்பு, பகுத்தறிவு நோக்கு, தமிழின் மேன்மை, திராவிடர் ஆரிய முரண்பாடு போன்றவைகள் 1882-1904 காலக்கட்டதில் பார்ப்பனர் செல்வாக்கு எவ்வாறு இருந்தது என்பதைக் கூறியுள்ளார்.
முதல் கட்டம்
1917 சோவியத் புரட்சியினால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜார் மன்னரை வீழ்த்தினர்  லெனின் 1917 இல் நவம்பர் போல்ஷ்விக்குகள் பொதுவுடைமை அரசு நிறுவுதல். இதன் தொடர்சியாக 1931ல் பெரியார் பொதுவுடைமை கருத்துக்களை மொழிபெயர்த்து ‘குடியரசு’ இதழில் வெளியிட்டார். மேலும் அக்காலத்தில் 1930 இல் இந்து மதத்தினை நொருக்குவது தேவையாக இருந்தது , இத்தகையச் சூழலில் பாரதிதாசன் 1938 இல் முதல் கவிதைத் தொகுதி வெளியிட்டார்.
 இரண்டாம் கட்டம்
கவிஞர்களான டி.எஸ்.எலியட் எக்ஸ்ரா ப்வுண்ட் போன்றோரின் கவிதைகளின் தாக்கமும் பாரதியாரின் வசன கவிதைகளும் தமிழ் கவிதை ஆக்கத்தில் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வடிவ ரீதியில் மாற்றம் எழுந்த பின்னணியில் 1938ல் பாரதிதாசனின் இரண்டாம் கட்டம்’ தொடங்குகிறது. பாரதிதாசன் மரபையே பெரிதும் விரும்பினார் என்பதும் வருணாசிரமத்தை மட்டும் எதிர்த்தார் என்பதும் தெரிய வருகிறது. ‘சஞ்சீவி பர்வததின் சாரல்’, எதிர்பாரத முத்தம், இந்தி எதிப்பு பாடல்கள்,  அழகின் சிரிப்பு, குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, முல்லைக்காடு, தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி போன்றவகள் இக்கால கட்டத்தின் படைப்புகளாகும் என்கிறார்.
மூன்றாவது கட்டம்
1950 எழுதிய கவிதைகள் முந்தையதைக்காட்டிலும் வேறுபடுகிறன. கண்ணகி புரட்சிக்காப்பியம் ,மணிமேகலை வெண்பா போன்றவைகள் சறுக்கல்கள் என்கிறார். இறுதியாகத்  தமிழர் என்ற  பேச்சுப் பின்புலத்தில் பகுத்தறிவின் தேவை ஆழமாக உணரப்பட்ட சூழலில் ’கனகசுப்புரத்தினம்’ கவிதை ஆளுமையாகத் தமிழ் சமுதாயத்தில் உச்சமடைந்த வரலாற்றை அறிமுகமாக கூறிள்ளார். இக்கட்டுரையில் கூறியுள்ளவை அனைத்தும்  பாரதிதாசனின் இலக்கிய ஆளுமையைச் சமூக, பொருளாதார,அரசியல், வரலாற்று பின்புலத்தில் அறிந்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
தற்காலத் தேவையில் இலக்கியங்களை  நேசமான முறையில் அணுகிட வேண்டும்.  இந்த அணுகுமுறைதான் மீட்டுருவாக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி மையத்தை நோக்கி பயணிக்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

நூல் பெயர்          : மறுவாசிப்பில் மரபிலக்கியம்
சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை       
ஆசிரியர்              : ந.முருகேச பாண்டியன்       
பதிப்பகம்             : நற்றிணை
பதிப்பாண்டு        : மு.ப.2011         
பக்கம்                  : 144
விலை                  :100 





































மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...