Friday, 9 February 2018

தனிமையின் நூறு ஆண்டுகள்



தனிமையின் நூறு ஆண்டுகள் (நாவல் அறிமுகம்)
காப்பிரிய கார்சியா மார்க்கேஸ் எழுதிய ஸ்பானிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் தனிமையின் நூறு ஆண்டுகள் எனும் நாவல் ஆகும். காலச்சுவடின் வெளியீடாக வந்த இதனை ஞாலன் சுப்பிரமணியன், சுகுமாறன் இருவரும் சேர்ந்து மொழிப்பெயர்த்துள்ளனர். கனவுலகிற்குள் வாழ்வது போன்ற உணர்வினை அளிக்கும் இந்நாவல் மாய எதார்த்தத்த நாவலாக அனைவராலும் ஏற்கப்படுகிறது. எழுத்தில், கதையில், மொழியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்ற இந்நாவலானது  இருபதாம் நூற்றாண்டில் அனைவராலும் கொண்டாப்பட்ட நாவலாகும். 37 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே1967 ல் எழுதிய  இந்நாவலுக்கு 1982 ல் நோபல் பரிசு கிடைத்தத்து.
நாவலில் தனிமை என்பது மையப் பொருளாக அமைகிறது. ஒரு நகரத்தின் தனிமை, ஒரு மாளிகையின் தனிமை, கதைமாந்தர்களின் தனிமை  விரித்து பொருள் காணுவதற்குத் தோதாகக் கதைக்களம் அமைகிறது. கற்பனை நகரமான மகோந்தா இதனை உருவாக்கியவர் ஸோசே அர்க்காதியா யுயேந்தியா என்று தொடங்கும் இந்நாவல் ஒருவிதமான மயக்கத்தைத் தருவதாகவே நகர்கிறது.  மகோந்தாவானது சதுப்பு நகரம், இன்னும் இறப்பே இல்லாத நகரம், முழுக்க இயற்கைச்சார்ந்த வாழ்வுமுறை என்று தொடங்கி பின் வாரிசுகள் வருகைக்குப்பின் பொய், போர், முறையற்ற புணர்ச்சி, கொள்ளை நோய், வரட்சி போன்ற காரணங்களால் அழிகிறது.
இதனைப் பின்தொடர்வதற்கு இலத்தின் அமெரிக்க புரிதலோடு தான் அணுக வேண்டியுள்ளது. ரஸவாத பின்னணி, தங்க மீன், இரயில் வருகை  வாழைப்பழக்குழுமம், உறக்கமின்மை நோய், மறதி நோய், பன்றி வாழ் குழந்தை (கிறித்துவ நம்மிக்கைத்தொடர்பாக வழங்கும் கதை) போன்றவைகள் குறியீடுகளாக இலத்தின் அமெரிக்க வரலாற்றினை உட்கொண்டுள்ளது. நாவலின் ஊடே பழங்குடிகளின் அழிப்பு, மொழியழிப்பு, ரோமன் கத்தோலிக்க ஆதிக்கம் போன்றவைகளால் சீரழிவுகளால் அழிவுப்பாதை நோக்கியதைக் குறிக்கிறது.
கதை
ஸோசே அர்க்காதியா யுயேந்தியா மனைவி உர்சுலாவுடன் ஒரு புதிய நகரத்தை உருவாக்குகிறார். இங்கு இயற்கை மனிதன் விவசாயம் என்று வாழ்வு முதலில் இருக்கிறது.  அர்காதியாவிற்கு வெளியுலக தொடர்பில் விருப்பம் இருக்கிறது. ஆனால் உர்சுலா எப்பொழுதுமே கணவனின் செயல்பாடுகளில் முரண்பட்டே செயல்படுபவளாக இருக்கிறாள். பிறகு ஹோசே ஆர்காதியா யுயேந்தியா, ஹோசே அர்க்காதியா என்ற இரு மகன்களும் அமரந்தா எனும் மகளும்  என வாசிசுகள் உருவாகின்றனர். இப்பெயரிலினான கதைமாந்தர்களே  ஏழு தலைமுறைகளாகவும் திரும்ப திரும்பவருகின்றனர். எனவே நாவல் முழுவதும் யுயேந்தியா, அர்காதியா, அவுரேலியா, அமரந்தா எனும் பெயர்களே அதிகமாக வருகிறன்றன. முந்தைய தலைமுறையின் செயல்களை ஏற்ற செயல்பாடுகளும் கால மயக்கமும் புரிந்துக்கொள்ள சற்று கடினமானதாக உள்ளது. இருப்பினும் அமைதியான மகோந்தா நகரம் வாரிசுகளின் காதல், உச்சமான காதல், முறையற்ற காதல், வெளியுலகத்தொடர்பு, போர், போன்ற செயல்பாடுகளால் குடும்பமும் நகரமும் அழிவதை சித்தரிக்கும் வகையில் கதைச்செல்கிறது. இறுதியாக ஒரு தனியறையில் குடும்பத்தின் கடைசி அவுரேனியா தன் பிறப்பு, குடும்ப ரகஸியம் அனைத்தையும் அறிந்தவுடன் அந்த அறையில் அவன் படித்தது தான் அவனின் கடைசிநிமிடம் என தெரிந்தவுடன் மரணமும் நாவலின் முடியும் நமக்குக் கிடைக்கிறது. அவுரேனியா, உர்சுலா அமரந்தா இருவரின் முரட்டுத்தனமான உச்சமான காதல் வாழ்க்கையின் முடிவாகக்  குடும்பத்தின் கடைசி வாரிசு பன்றி வாலுடன் பிறந்ததும் வம்சமும் நகரமும்  அழிகிறது. இடையில் இறந்துபோனவர்களுடன் வாழ்தல் , கடும் போரினைச் சமையல் பாத்திரங்களால் செய்து வெற்றி பெறல் போன்ற  சில நம்ப முரியாத கதை நிகழ்வுகள் போன்றவைகள் ஒரு கனவுலகத்தைக் கண்முன் காட்டுவதாக உள்ளது.
ஒரு தனிமனிதன், ஒரு நகரத்தின் தனிமையென வருணிக்கப்படும் இந்நாவல் மொழி, இனம், மதம், நாடென அனைத்திற்கும் பொருந்துவதாக இருப்பதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாவல் அமைந்துள்ளது.  அனைத்து வரலாறுகளிலும் தொல்குடிகள் அழிப்பு, மிரளவைக்கும் இயற்கை இடர்பாடுகள், கொள்ளை நோய்கள், போர்கள் இவைகள் இருக்கும் இதனைப் பொதுமைப்படுத்தி வாசிக்கும் பொழுது அனைவருக்கும் பொதுவான ஒரு கதையாக இதைக்கொள்ள முடியும். அனைத்து வரலாற்றெழுதியலும் தொடரும் திரும்ப திரும்ப வரும் ஆண்டவர்களின் பெயர் மயக்கத்தைக் (குழப்பத்தை) குறிப்பதாக கொள்ளலாம். சான்றாக நம் வரலாற்றிலும் சேர, சோழ , பாண்டியர்களின் பெயர்கள் அத்தகையவையே. அழிவும், ஆக்கமும் இவர்களைச்சார்ந்தே இருந்ததைக் குறிப்பிடமுடியும். இக்கூறுகளை அனைத்து வரலாறுகளிலும் காணமுடியும். இம்மாதிரியானவை ஒவ்வொரு காலத்திலும் சிறு மாறுதல்களுடன்  நிகழ்வதைக் காணமுடியும். கி.பி.1492 கொலம்பஸ்  அமெரிக்காவை கண்டுப்பிடித்தார் என்பதுடன் இந்தக் கண்டுப்பிடிப்புப் பல பூர்வக்குடிகளின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்பதையும் மையமிட்ட ஒன்றாக இந்த நாவலைக் காணமுடியும். தேடி அலையும் வரலாற்றைத் தேடுபவனாக ஒவ்வொருத் தலைமுறையிலும் ஒருவன் இருக்கிறான் என்பதும் பெண்களின் விடாப்பிடியான சில நடவடிக்கைகளும் மேற்கூறியதோடுத் தொடர்புடையது ஆகும். தன் மொழியே அவுரேனியா மிகுந்த தேடுதலுடன் படிப்பது போன்றன்வைகள் இலத்தின் அமெரிக்க பகுதிகளில் அழிந்த இலத்தின் போன்ற புராதன மொழித்தேடலாக எண்ணத்தோன்றுகிறது.

2018 ஜனவரி புதுப்புனல் இதழில் வெளிவந்த மதிப்புரை



திணையுணர் பருவம் (நூல் மதிப்புரை)
தற்காலத்தில் உலகமையமாக்கல் பின்னணியில் பல்வேறு இடர்பாடுகளை இயற்கையும் மனிதனும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  இதனை எதிர்கொள்வதற்கு இயற்கையைப் பற்றிய புரிதல் அவசியமாகிறது.  உலகம் பற்றிய ஒட்டுமொத்த அறிவு மரபையும் அறிந்து விஞ்ஞான ரீதியாக உணருதல் என்பது தேவையாக உள்ளது. இந்த வகையான சிந்தனை ஓட்டத்தைச் சூழலியல் திறனாய்வு என்கின்றனர். திணைச்சார்ந்த கருத்துகளையும் அவ்வாறு நோக்கும் திறனாய்வாகவும் கோட்பாடாகவும் வளர்த்தெடுத்து உலகிற்கு வழங்க முடியும் என்பதைத் தலையாய நோக்கமாக கொண்டு க. ஜவகர்   ‘திணையுணர் பருவம்’ (திணையியல் கட்டுரைகள்) என்ற நூலினை எழுதியுள்ளார். புதுப்புனல் வெளியீடான இந்நூலுக்குக் கோவை ஞானி அவர்கள் வாழ்த்துறை வழங்கியுள்ளார். முன்னுரையை நூலின் ஆசிரியர் வழங்கியுள்ளார். உள்ளுறை பதினாறு தலைப்புகளில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த இந்நூலின் அறிமுகமாக இக்கட்டுரை அமையும்.
நூலில் இடம்பெற்ற கட்டுரைகளைப் பொருள் ஒற்றுமை நோக்கி கீழ்க்காணும் தலைப்புகளில் பிரிக்கலாம்.
Ø திணையுணர்த்தல் (4)
Ø மீளாய்வு நோக்கில் சங்க இலக்கியம் (3)
Ø தமிழ் மெய்யியலும் சித்தர் மரபும் (3)
Ø மண்ணியல் ஆய்வாளர்கள் (3)
Ø மதிப்புரைகள் (3)
திணையுணர்த்தல்
தமிழியல் ஆய்வுப்பரப்பில் திணையியல் ஆய்வை முன்னெடுப்பதற்கான நோக்கம், தேவை போன்றவைகளை மேற்கத்திய கோட்பாடுகளின் வழியில் விரிவான முறையில் அலசுகின்றன இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள். முதல் கட்டுரையான  திணையுணர் பருவம்’ எனும் கட்டுரை திணைக்கோட்பாட்டை வளர்பதற்கான முன்னுரையைப் போன்று அமைகிறது. திணைக்கருத்தியலை உலக நிலைப்பட்ட ஒன்றாக ஆக்குவதற்கான முயற்சியை பொது / சிறப்பு எனும் இரு நிலைகளில் விளக்குகிறார். பொதுநிலையில் இயற்கை, உயிரினத்தொகுதி  என்பதும் சிறப்பு நிலையில் பண்பாட்டு  அறிவு மரபுகளை முன்னெடுத்தல் என்ற அடிப்படையில் விளக்குகிறார்.  இவற்றை உலகச்சூழலையும் இந்திய / தமிழ்ச் சூழல்களையும்   கருத்தில் கொண்டு நவீனத்துவத்தின் நுகர்வுக்கலாச்சாரம் இவைகளால் ஏற்பட்ட சிதைவுகளைச் சரிசெய்வதற்கான அடிப்படையை தரக்கூடியதாகத் திணைச்சார்ந்த சிந்தனை அமையும் என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது.
சூழலியமும் திணைக்கோட்பாடும் என்ற கட்டுரையில் திணையியல் ஆய்வுக்கான சில மாதிரிகளை மேற்கத்திய கோட்பாட்டளார்கள், தமிழ் திணையியல் ஆய்வாளர்கள் வழி விளக்குகிறார். சூழலிய கோட்பாட்டை போலவே திணைக்கோட்பாட்டை அணுகுவதற்கான சில அடிப்படைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
 ‘சூழல் பெண்ணியமும் திணைக்கோட்பாட்டு பெண்னியமும்’ எனும் கட்டுரையை முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக அணுகலாம். வளர்ந்த சூழலியக் கோட்பாடு எவ்வாறு மற்ற கோட்பாட்டோடு இணைந்து செல்கிறதோ அதே போலவே  திணைக்கோட்பாட்டையும் மற்றவற்றுடன் இணைக்கமுடியும் என்பதை  நிறுவும் வகையில் சங்க  பெண்கவிஞர்களின் கவிதைகளை அனுகியுள்ளார்.
 ‘திணைக்கோட்பாட்டின் அறவியல்’ எனும் கட்டுரையில் பகிர்ந்துண்ணும் பண்டைய இயற்கை பண்பைத்  திணையறமாக அதுவே திணைக்கோட்பாட்டை மேம்படுத்தும் சூழலியத்தின் அறவியல் கோட்பாடு என்கிறார். திணைக்கோட்பாட்டின் அறவியல் கொள்கைகள் தொல்காப்பியம் சங்க இலக்கிய இணைப்பின் வழியாக பெறமுடியும் என்கிறார். திணைக்கோட்பாட்டின் அமைப்பும் அறவியலுக்கான அடிப்படைகள் முதல், கரு, உரி என்பதிலிருந்து பெறமுடியும். இதனை முதல் - புவியமைப்பு + பருவக்கால அமைப்பு கரு – மனித அனுபவங்கள், உணர்வுகள் உரி – மனித உறவுகள் என்று விளக்குகிறார். உயிர்த்தொகுதியின் முதன்மை (முதற்பொருள்), இயற்கை உயிர்த்தொகுதியுடான ஒத்திசைவு (கருப்பொருள்), ஒத்திசைவுகளின் வழியாகப் பெறும் பொதுமையாக்கம் (உரிப்பொருள்) இவைகளின் ஊடாக திணை பொதுமையாக்கத்தை நிறுவுகிறார். இயற்கை மையமான படைப்பிலக்கிய மரபினை முன்னிலை செய்வதற்கான அடிப்படைகளை இக்கட்டுரைத் தருகிறது.
மீளாய்வு நோக்கில் சங்க இலக்கியம்
சமூகவியல், அறிவியல், கலையியல்,  மொழிப்பொருண்மையியல் இவற்றைப் பிரதிபலிக்கும் ஒன்றாக கருத வேண்டுமே தவிர வெறும் இலக்கண நூலாக மட்டும் கருதல் கூடாது என்பது மையக்கருவாகும். என்றுமே நவீனமாக இருப்பது தொல்காப்பியம்தான் இது பல முன்மாதிரியான சிந்தனைகளை விதைக்க கூடியது என்கிறார். தொல்காப்பியக் கல்வியைப் பனுவல் வையப்பட்ட ஒன்றாக முட்டும் கருதாமல் வழக்குத் தொடர்பான அனைத்துக்கூறுகளையும் இணைத்துப் பார்பதன் வாயிலாகத் தமிழியல் ஆய்வுகளை நவினத்தன்மையோடு அணுக இயலும் என்பதைக் கூறும்விதமாகத் தொல்காப்பிய நெறிக்கு ஒத்த ஆய்வுகளின் மீள் தேவை அல்லது ஒருங்கிணைந்த பார்வை மீட்டெடுப்பதறகான ஒரு முன்னுரை என்ற கட்டுரை அமைகிறது. இதன் தொடர்ச்சியைப்போன்று சங்க கவிதகளும்: புதிய / இயல்பான பார்வைகளை நோக்கிய முன்னெடுப்பிற்கான முன்னுரை, நற்றிணை: பாடவேறுபாடும், உரைவேறுபாடும் எனும் கட்டுரைகள் அமைகின்றன.
தமிழ் மெய்யியலும் சித்தர் மரபும்
 ‘சிலப்பதிகாரம் கவிக்கூற்றில் வெளிப்படும் திணைமெய்யியல்’ எனும் கட்டுரை இளங்கோவடிகள் பின்பற்றும் தமிழ் அறம் பற்றி விவாதிக்கிறது. இயற்கையை முதன்மையாக கருதல், ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தை எதிர்க்கும் பொழுதும் வெளிப்படும் அறம், அரசர்களின் செயல்களிலும் காணாலாகும் அறம், திணை மரபை வேண்டிநிற்கும் திணைக்குடிகளின் குரவை, வரிப்பாடல்கள், கண்ணகி, கோவலன்  இவற்றின் ஊடாக உணர்த்தும் அறச்செயல்பாடுகள் போன்றவைகள் அனைத்தும் திணைச்சாந்த மெய்யியல் சிந்தனையை அளிக்கின்றன. என்பது சிலப்பதிகாரத்தைத் தத்துவப் பின்புலத்தில் அணுகுவதற்கான ஆய்வுப் பின்புலத்தைத் தருகிறது.
 ‘வேமனாரும் பிற்காலத் தமிழ் அற இலக்கியங்களும்’,  ‘வள்ளலாரின் நவீன முகம் பாரதி ’(வள்ளலாரும் பாரதியும்:சிற்றிலக்கிய ஒப்பீடு) எனும் இரு கட்டுரைகளும் திணைச்சார்ந்த அறத்தை இவர்களின் படைப்புகளின் வாயிலாக அலசுகிறது. பிற்காலத்தில் சித்தர் மரபில் தொடர்ந்த திணையறத்தை  அடிப்படையாக கொண்டு இக்கட்டுரைகள் அமைகின்றன. தெலுங்கு வேமானரின் அறிமுகம் இவர் வரலற்றில் தொடர்ந்து மறைக்கப்பட்டதற்கான சமூகப் பின்னணி, இவரைப்போலவே வள்ளலார், பாரதி இருவரையும் கருதுவதற்கான வாய்ப்பை இரண்டுக் கட்டுரைகளும் அளிக்கின்றன.
மண்ணியல் ஆய்வாளர்கள்
         ‘தமிழியல் ஆய்வுகளுக்குக்  கோவை ஞானியின் பங்களிப்பு’ எனும் கட்டுரை 20 நூற்றாண்டு ஆய்வறிஞர்களின் ஒருவரான ஞானியின் ஆய்வுப்பரப்பைக் காலம்,  அவரின் பின்புலம் சார்ந்தவைகளை விரிவான முறையில் ஆராய்கிறது. ஞானியின் பன்மைத்துவச் சிந்தனைவெளியின் புரிதலை மையமிட்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.
தஞ்சைமொழி எனும் மாயையை நீக்கிய வண்டல் சேற்றின் நறுமணம், சேறும் சகதியும், கமழத் திரண்டெழும் நைந்துப்போகாத் தஞ்சை வாழ்வு எனும் இருக்கட்டுரைகளும்  மண்சார்ந்த  படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுப்பவரான சோலை சுந்தரபெருமாளின் சிந்தனைப் பின்புலம் இவரின் படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆராயும் விதமாக அமைகிறது.
மதிப்புரைகள்
         இன்று ஏன் தேவை சங்க இலக்கியம்’ என்ற நூலுக்கான மதிப்புரையாக இடம்பெறும் சங்க இலக்கியம்: தமிழின் தன்னிலை உருவாக்க அடிப்படைகளும் உயிர்களின் உலகைச் சமைக்கும் புதிய அரசியலுக்கான முன்னெடுப்பும் என்ற கட்டுரையும்,  ‘து.மூர்த்தியின் தமிழியல் புதிய தடங்கள்’   என்ற நூலுக்கான மதிப்புரையாக அரசியலை நிறுவும் தமிழியல் தடங்கள் என்ற கட்டுரையும் தமிழியல் ஆய்வுக் களனை நீட்டித்தரும் முன்னுரையக  அமைகிறது.  ‘ஆழியாளின் துவிதம்’ கவிதைத் தொகுப்பின் மதிப்புரையாக இடம்பெறும் வலியும் வலியறிதலும்  என்ற கட்டுரை ஆழியாளின் சமூக பின்புலம் அவரின் படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறது. மூன்று விவாதங்களும் இலக்கிய விரிவாக்கத்தை முதன்மை படுத்தும் நோக்கில் அமைகின்றன.
            நவீனமாக பார்க்கும் பொழுது சில இடர்பாடுகளும் ஏற்படும் இதைப்பற்றிய எந்த விவாதமும் இடபெறாதது ஏனென்று தெரியவில்லை . திணை என்ற அதிகார படிநிலை கட்டமைப்பிற்குள் இருப்பதைச் சாறாக மட்டும்  உறிஞ்செடுத்து கோட்பாடாக உருவாக்குதல்  என்பது  நெருடலாக உள்ளது. அடுத்து அனைத்து மக்களிடமும் கோட்பாட்டுப் பரவலாக்கத்தை எவ்வாறு கொண்டுச் செல்வது என்று சிந்திக்காதது போல உள்ளது.  உள் முரண் களைந்து ஏற்றல், உரைகளில் இருக்கும் குறைபாடுகளைக் பிரச்சினைகளை மட்டும்  நீக்குதல் என்று கூறுவததெல்லாம் சமாதனமாகத் தெரிகிறது. முன்னுரையில் கலை இலக்கிய ஆய்வுகளைச் சமுக, அரசியல், பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலத்தில் அணுக வேண்டியதென்பதும் வரலாற்று மீளாய்வுக்கு அம்பேத்கார் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் கூறியிருப்பது சிறப்பு. தெலுங்கு வேமானார் பற்றிய தகவல்கள் இலக்கிய வரலாற்றிற்குப் புதியது. சித்தர்களின் மரபில் வைத்து  வள்ளலார், பாரதி ஆய்வுகளைப் பார்த்ததும் நல்லாயிருக்கு. சங்க இலக்கிய ஆய்வுகளை நவீனத்தன்மையுடன் அணுகுவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் நூல்  இந்நூல் இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான நூலாகும்.


         

2018 ஜனவரி புதுப்புனல் இதழில் வெளிவந்த மதிப்புரைகள்



தந்திர வாக்கியம் (நாவல் அறிமுகம்)
வரலாற்றுக்கும் புனைவிற்முள்ள இடைவெளியைக் குறைக்கும் புனைவு வடிவம்
தமிழில் பின்நவீனத்துவம் சிந்தனை, எழுத்துமுறை உருவானதில் முதன்மையாகச் செயல்பட்டவர்களுள் எம்.ஜி.சுரேஷ் முக்கியமானவர். சிற்றிதழ் இயக்கத்திலும் தன்னைத் தொடர்ந்து இணைத்துக்கொண்டவர். சிலந்தி, அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனிரும், அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் போன்ற நாவல்ககளையும் பின்நவீனத்துவம் என்றால் என்ன, இசங்கள் ஆயிரம் போன்ற கோட்பாட்டு  நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அனைத்து விதமான சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டவர்களில் ஒருவரான இவர் பின்நவீனத்துவம் சார்ந்து சிந்திப்பதில் வல்லவர் என்பதை இவரின் படைப்புகள் வழி உணரலாம். இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த  ‘தந்திர வாக்கியம்’(கிழிளிக்‌ஷிணிலி ளிதி திஸிகிநிவிணிழிஜிஷி) - (A NOVEL OF FRAGMENTS) என்ற நாவல் முக்கியமான நாவல்களில் ஒன்றாகும்.
நாவல் வடிவமும் உள்ளடக்கமும்
         இந்தியாவில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் இருமை எதிர்வு கலந்துள்ளது. புத்தரின் சிந்தனையும் இதனை ஒத்ததாக இருந்திருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை இருமை எதிர்வு ஆட்டிப்படைத்திருக்கிறது. எனவே இதனை அடியாகக் கொண்டு இரண்டு கதைகள் கொண்ட நாவலை உருவாக்கியதாக  நாவல் ஆசிரியர் கூறுகிறார். இதுக்கூட களப்பிரர் காலம் பற்றியான வரலாற்றையும் புனைவின் வாயிலாக சாத்தியமாக்கும் வகையில் கதையோடு இணைகிறது.  “இதுவரை  வேள்விக்குடிச் செப்பேடு, யாப்பருங்கலக்காரிகை, பதிற்றுப்பத்து ஆகியவற்றின் மூலமாக துண்டு துண்டான விவரங்களாகவே கிடைக்கும் களப்பிரர் வரலாற்றை நேர்கோட்டில் எழுத முடியாது என்பதால் இந்த நாவலையும் துண்டாடப்பட்ட விவரணையாக மாற்றித் தாவிச்செல்லும் உத்தியில் செல்கிறது (fragmented narrative) ” என்கிறார்.
          ஆசிரியரின் சிந்தனையின் படியே நாவல் 98 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரு கதைகளும் கவனமுடன் தொடர்ச்சியாக பின்னப்பட்டுள்ளன. வரலாறு கூறும் கதையில் வரும் கடிதங்கள் முதலில் வரிசையாகயாக வருகிறது பிறகு இடையில் ஒன்று இரண்டு குறைந்து வருகிறது. பிறகு இடைவெளி அதிகமாகிறது பிறகு இன்னும் குறைந்து தொகுத்து தருவதாக இருப்பது தவிச்செல்லும் உத்திக்குப் பொருத்ததைத் தருகிறது. இது மேலும் வரலாறும் ஒருவகையான புனைவு என்பதனை நினைவூதாக இந்த வடிவமைப்பைக் கருதலாம். எனவே இது வழக்கமான நாவல்களில் இருந்து தனித்து இருக்கிறது. இரு கதைகளின் பின்னலாக இருந்தபோதிலும் எது இக்கதை எது அக்கதை என்று குழப்பம் இல்லாமல் வாசிக்கும் வகையில் உள்ளது. பெரிய நாவலாக இல்லாமல் 225 பக்கங்களில் வரலாறு கலந்து சுவையாகக்  கோர்க்க முடியும் என்பதில் வெற்றிக் கண்டுள்ளது.
நாவல் பழமையும் புதுமையும் கலந்த இருமை எதிர் நிலையில் எளிய நடையில் அமைகிறது. இதுவரை மறைக்கப்பட்ட (இருண்ட கால) வரலாற்றை மையமிட்டதாக கதை நகர்கிறது. நவீன வாழ்க்கையுடன் பழைய வரலாற்றைக்  கொண்டுச் செல்லும் வகையில் உள்ளது.  ஒரு சாதாரண வாழ்க்கை இதில் கலக்கும் அறிவியல் இதனுடன் கூடிய பிரச்சினைகள், அரசியல், அதிகாரம், வரலாற்றுணர்வு இவைகளுடனான ஒரு பிணைப்பினை நாவலை வாசிக்கும் பொழுது உணரலாம்.

மையமாவவர்கள்
        இருண்ட காலம், கணினி காலம் இடையில் உள்ள  புரிதலைக்கொண்ட இந்த நாவலில் குறைந்த கதைமாந்தர்களே வருகின்றனர். முக்கிய காதாப்பாத்திரமாக கணினி கால நிகண்டனும், இருண்ட கால நிகந்தனும் வருகிறார்கள். குணத்திலுல் செயலிலும் ஒத்து போகக் கூடியவர்களாக உள்ளனர். இதுபோக நிகண்டனின் அப்பா (திரமிளன்) அம்மா (இருளாயி) காதலி, நண்பர்கள் என்று பலர் உள்ளனர். மற்றொரு வரலாற்றுக்கதையில் சீனபௌத்த பிக்குவான ஹுவாகுவா ஜாங்ஜின், இவரின் நண்பனான லுவேஜியா, காதலி, வழிப்பயணத்தில் சந்தித்தவர்கள் என பலர் உள்ளனர்.
மையம்
        தீவிர தமிழ்ப்பற்றும், வரலாற்றுப்பற்றும் உடையவரான திரமிளன் தன் மகனுக்கு நிகண்டன் என்று பெயர் வைக்கிறார். மகன் திறமையான  மென்பொருள் துறையில் (IT) வல்லுனாக வளர்கிறான். சிங்கப்பூரில் வேலையில் சேர்கிறான். இவனின் முற்போக்கான  சிந்தனையின் பயனாகப் பெரிய கண்டுபிடிப்புகளையெல்லாம் நிகழ்த்துகிறான். அத்துறையில் அவனால் அதிகாரமற்ற சோசலிச சிந்தனையைக்கொண்ட ஒரு நிறுவனத்தை அமெரிக்காவிலும் நடத்த முடிகிறது. இதற்கு அடித்தளமாக சிங்கப்பூர் நூலகத்தில் கிடக்கும் இந்திய வரலாறு பற்றி கி.பி.3 நூற்றாண்டில் எழுதிய நூலின் ஆங்கில மொழிப்பெயர்பு அமைகிறது. ஜாங் எழுதிய கடிதங்களின் வாயிலாகச் சில விளக்கங்களையும், வரலாற்றுப்புரிதல்களையும் புரிந்து சிறந்த சிந்தனைக் கொண்ட மனிதனாகக் செயலாற்றுவதாகக் கதை அமைகிறது. இடையில் தகவல் தொழில் நுட்பத்துறையில் (IT)இருக்கும் இடர்பாடுகள், நம்பகமற்றத்தன்மை, காதல், பேராசை, நிலையாமை போன்றவைகளும் கலக்கின்றன. இதனுடன் வரலாற்றுத்தேடலில் மிகுந்த இடைவெளிக்கொண்ட இருண்ட காலத்திற்கு ஒரு புதிய விளக்கம் தரும் வகையில் உள்ளது.  ‘தந்திரம்’ ,  ‘மந்திரம்’ எனும் இருச்சொற்களைத் தேடி நகரும் கதையானது புத்தரின் சார்பில்லாத  ‘மத்திமம்’ தான் தீர்வு என கதை தீர்வாகிறது.
அதிகாரம் , புகழ், மேன்மை போன்ற மாயைகளால் உருவாக்கப்படும் ஒரு இல்லாத அதாவது மந்திர தனமானவற்றிலிருந்து மக்களை விடுவிப்பது தருணங்கள் தான் அதாவது தந்திரம்.  இக்கதையில் வரும் நிகண்டன்  தந்திர வழியில் சிந்திக்கும் போக்கினை அவன் வரலாற்றினால் பெறுகிறான். இதனால் நிகண்டன் அவன் துறையில் இருக்கும் இருமை நிலையைக் களைவதற்கான வழியை அவனுக்கு வரலாற்று கற்றுத் தருகிறது. இதற்கான அடிப்படையைக் குடும்பமும், சமூகமும் அவனுக்கு அமைத்துத் தருகிறது.
மந்திர வாக்கியம்
          நிகண்டனின் கதை நடைமுறையைக் கண்முன் தெரிவிப்பவையாக இருக்கிறது. நாவலின் முக்கிய பயணம் வரலாற்றில் புத்தரின் சிந்தை எவ்வகையில் மேன்மையானது என்பதை விளக்குவதாக உள்ளது. ஜாங் பயணம் சீனாவிலிருந்து இந்து நாடு தேடி முடிகிறது. புத்த துறவியான ஹூவாகுவாங் ஜாங் கி.பி.265 ஆன் ஆண்டுகளில்  சீனவில் வாழ்ந்துள்ளார். புத்த மத இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தெளிந்துள்ளார். பிறகு  ‘மந்திர வாக்கியம்’ என்ற கலைச்சொல்லைத்தேடி இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த முதல் சீனப்பயனி இவர் ஆவர். பாஹியானுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.  இவர்  வழியில் கண்ட நாடுகள், வருணைகள் வாயிலாக நாவல் ஆசிரியரின் அறிவுவெளி வெளிப்படுகிறது. பல்வேறு நாடுகள், காலம், சூழல் இவைகளை அறிந்து எழுதியிருப்பது வியக்கத்தக்கது.
நிரப்பட்ட வரலாறு
          ஜாங் தனது பயணத்தின் பொழுது எழுதிய 50 கடிகங்களின் வாயிலாக இருண்ட காலத்தைப் பற்றியயான ஒரு புது விளக்கத்தைப் பெற முடிகிறது. இந்த நாவலிலும் விட்டுவிட்டு செய்த மொழிப்பெயர்பின் வாயிலாக  துண்டுத்துண்டான வரலாற்றுப்பதிவையே (fragmented narrative) திரும்பவும் நினைவூட்டுகிறது. எனினும் நாவல் ஆசிரியர் தேடல் நாவலின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள பார்வை நூல்களின் வாயிலாக இது வெறும் புனைவல்ல ஆராய்ச்சிக்கு  உரியது என்று தெளியலாம்.
சில தகவல்கள் மட்டும் சுருக்கமாக
முதலில் அசோகனின் மகனின் நாடான குஸ்தானன் பற்றியும், மரணத்தை இன்பமாகக் கருதும் போலார் இன மக்கள் பற்றியும், காந்தாரம் பற்றியும், கபிலவஸ்து, காமரூபம், கலிங்கம், சதவானம் போன்றவைகளைப்பற்றி அறிய முடிகிறது. வடக்கில் மோசமான சாதியமும், சதி, போன்றனைகள் இருந்தாகவும் பதிவிட்டுள்ளார். பின்பு மந்திர தந்திர வாக்கியங்களுக்கான  பொருளை மதுரைக்கு வந்து ஜான் அறிகிறார் என்பதன் வாயிலாக விவாதங்கள் தோற்காமல் தமிழகத்தில் நிலவி பெரிய மாற்றத்துடன் தமிழகம் திகழ்ந்தை அறிய முடிகிறது. இதுவரை வேறொருவர் வந்து தமிழகத்தை ஆண்டனர் என்ற நிலை மாறி இங்கேய சமணம், பௌத்தர்களால் புரட்சி ஏற்பட்டு அதன் வாயிலாக நிகண்டன் மக்கள் ஆட்சியை மேற்கொண்டான் என்பது நிரப்பட்ட வரலாறு. மன்னன் என்பவன் மக்களின் சேவகன்  என்பதையும் தருணங்கள் தான் அனைத்தையும் தீர்மாணிக்க வல்லது என்பதைத் தந்திரமாக கொண்டு பின் நவீனத்துவ சார்ந்த சிந்தனைக்குப் பௌத்தமே அடிநாதம் என்பதன் அடியில் பிறந்த நாவல்  ‘தந்திர வாக்கியம்’ ஆகும்.
திரமிளச்சங்கம் என்பது ஒரு மாதிரியாகச் செயல்பட்டு புனைவினால் வரலாற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் நாவல் அமைந்துள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இருக்கிறது. அனைத்து வரலாற்றிலும் அதிகாரத்தின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் 2500 ஆண்டுகால இடைவெளியை நிரப்பி உள்ளது. புனைவில் ஆய்வையும் ஆய்வில் புனைவையும் சாத்தியமாக்கி இருக்கிறது. அந்த வகையில் நேர்க்கோட்டு தன்மையற்ற பின்நவீனத்துவ  நாவல் என்று இதைக் கூறமுடியும். தமிழில் வரலாற்றுப் புனைவுகள் என்ற எழுத்துகள்  வரலாற்றை திரிப்பதாகவோ வெறும் புனைவிற்குள் கட்டியெழுப்புவதாகவோதான் பெருபாலும் ஆயிருக்கின்றன. ஆனால் சிதறிய வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் வரலாற்றைப் புனைவினால் இட்டு நிரப்பி கலைத்தன்மையாக்கியுள்ளது இந்நாவல். வரலாற்றிற்கும் புனைவிற்குமுள்ள இடைவெளியை குறைத்துள்ளது. வரலாறும் புனைவும் வரலாற்றில் இப்படியாகக் கலந்து இயங்குகிறது என்பதை முன்வைக்கிறது. அந்த வகையில் தனித்துவமான நாவலென்று இதைக்கூறமுடியும்.


மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...